April 9, 2019
தண்டோரா குழு
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால் கன்டெய்னரை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.பொது மக்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார் கன்டெய்னர் ஆட்சியர் அலுலகம் கொண்டு வந்து திறந்தனர்.
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் இரவு பத்து முப்பது மணி அளவில் கன்டெய்னர்
லாரி ஒன்று வேகமாக சென்றுள்ளது. கன்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக அதை விரட்டி பிடித்தனர் . அப்போது லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், கன்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியது .
கண்டெய்னர் லாரி நிறைய பணம் பிடிபட்டுள்ளது என்ற பரவிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆத்துப்பாலம் பகுதியில் குவிந்தனர் . இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கண்டெய்னர் லாரி தாராபுரத்தை சேர்ந்த என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
லாரியல் டீத்தூள் இருப்பதாக லாரி ஓட்டுனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால் நம்ம மறுத்த பொதுமக்கள் கன்டெய்னர் லாரியை உடனடியாக திறந்து காட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாரியை பொதுமக்கள் முன்னிலையில் திறந்து காட்ட வேண்டும் எனவும் இல்லையெனில் லாரியை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களை கலைந்து போகச் சொல்லி காவல்துறை தரப்பில் பலமுறை கேட்கப்பட்டது. ஆனால் கூட்டம் கலைந்து செல்லாத நிலையில் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து லாரியை சுற்றி நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஆளுக்கு ஒருபுறமாக ஓட்டம் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் , பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை விட்டு கலைந்து செல்ல வேண்டும் எனவும் தாசில்தார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியில் உள்ள பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் , அவர்களின் சோதனைக்கு இடையூறு செய்யாமல் பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் என மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து கன்டெய்னரில் இருந்த பூட்டானது உடைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக திறக்க முடியாததால் கன்டெய்னர் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்ல காவல் துறையினர் முடிவு செய்தனர். பொது மக்களில் ஒரு சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்படி சொன்ன காவல் துறையினர் லாரியை ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.கன்டெய்னர் லாரி கோவை ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது.அதில் டீத்தூள்கள் மட்டுமே பண்டல் பண்டல்களாக இருப்பது தெரிய வந்தது.ஆட்சியர் அலுவலகத்திற்கு திமுக உட்பட அரசியல் கட்சியினரும் நேரில் வந்து பார்வையிட்டனர்.கன்டெய்னர் முழுவதும் டீத்தூள் மட்டுமே வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. டீத்தூள் வெள்ளக்கிணறு பகுதியில் ஒரு ஆலையில் இருந்து பேக் செய்யப்பட்டு கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் ஆட்சியர் அலுவலகம் வந்த திமுகவினர், லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் எனவும், கன்டெய்னரில் முன் பகுதியில் உள்ள மூட்டைகளை மட்டும் சோதனையிடுவதில் உடன்பாடு இல்லை என திமுகவினர் தெரிவித்தனர்.
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் பிடிபட்ட கன்டெய்னரில் இருக்கும் எல்லா மூட்டைகளையும்
இறக்கி ஆய்வு செய்யவேண்டும் , காலையில் அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்த பின்னரே விடுவிக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தனர்
லாரியில் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு வந்த டீத்தூள் என கூறிய தனியார் நிறுவன ஊழியர், அனைத்து மூட்டைகளையும் இறக்கி காட்டி விட்டு பின்னர் மீண்டும் கன்டெய்னரில் ஏற்றி செல்ல இருப்பதாகவும், 30 லட்சம் மதிப்புடைய டீ த்தூள் இது எனவும் தெரிவித்த தனியார் நிறுவன ஊழியர், திட்டமிட்டபடி ஜெர்மனிக்கு டீ தூளை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.கஸ்டம்ஸ் செக் பண்ணி சீல் வைத்த பின்னரும் இது போன்ற சர்ச்சையில் டீத்தூள் கன்டெய்னர் சிக்கி இருப்பது தங்கள் நிறுவனத்திற்கே புதிய அனுபவம் எனவும் தனியார் நிறுவன ஊழியர் அக்பர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்
3 கன்டெய்னர்களில் பணம் பிடிபட்டிருந்த நிலையில், தற்போது கன்டெய்னர் நிறைய பணம் என்று பரவய தகவலால் இரவு நேரத்தில் காவல் துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் தூக்கத்தை தொலைத்தனர்.இரவு
10.30 மணிக்கு துவங்கிய விவகாரம் அதிகாலை 2 மணி வரை நீடித்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கன்டெய்னர் லாரிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.