May 31, 2018 தண்டோரா குழு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 17 வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6 முதல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
உத்தமம் என்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 1997ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை மாதம் 6,7 மற்றும் 8 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உத்தமம் துணைத்தலைவர் மணியம்,
“அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம்,கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளில் நடக்க உள்ளதாக கூறினார்.இதில் ஆய்வரங்கத்தில் இயல்மொழிப் பகுப்பாய்வு,இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள்,இணைய பாதுகாப்பு,தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து,ஐக்கிய நாடுகள்,ஜெர்மனி,பிரான்ஸ்,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலிய,சிங்கப்பூர், மலேசியா,இலங்கை,போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசியர்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறினார்.
மக்கள் அரங்கத்தில் பொதுமக்களுக்கும்,மாணவருக்கும் அலைபேசிகளுக்கான IoT,Python,Robotics Technology,3D printing குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி,கணினி சார்ந்த பயிற்சிகள்,இணையம் சார் பயிற்சிகள் ஆகியவை கொடுக்கப்படவுள்ளாதாக கூறிய அவர்,கண்காட்சி அரங்கில் மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழக கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவித்தார்.
உலகளவில் இருந்து 9 முக்கிய பேச்சாளர்கள் இதில் கலந்துக் கொள்வதாகவும்,கூகுள் நிறுவனத்திலிருந்து பேச்சாளர் வரவுள்ளார் எனவும் கூறினார்.