July 26, 2019
தண்டோரா குழு
கோவை துடியலூர் அருகே வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நகர முடியாமல் இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நின்றுருந்த 12 வயது மதிக்கதக்க பெண் யானை இன்று உயிரிழந்தது.
கோவை துடியலூரை அடுத்த வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் இடங்கள் அமைந்துள்ளன.இந்த இடத்தில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை
இரண்டு நாட்களாக ஓரே இடத்தில் நகராமல் சோர்வுடன் நின்று வந்தது. இதை பார்த்த பொது மக்கள் யானை நிற்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பெண்யானையை கண்காணித்து வந்தனர். பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று பெண் யானை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.