June 19, 2019
தண்டோரா குழு
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர் நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்த நோய், கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அதேபோல, நாடு முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மூளை காய்ச்சலினால் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலினால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா (21). இவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி ரம்யாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு பரிசோதனை செய்ததில், மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இளம் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது