January 15, 2021 தண்டோரா குழு
கோவையில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு நாளை முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை – ஜபல்பூர் இடையே நாளை முதல் 27 ஆம் தேதி வரை விழாக்கால வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நாளை முதல் ஜபல்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜபல்பூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 4.05 மணிக்கு கோவை வந்தடையும். மறுமார்க்கமாக 18 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த வாராந்திரச் சிறப்பு ரயில்கள், ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, குண்டப்புரா, கங்கவல்லி, ரத்னகிரி, நாசிக் சாலை, புஷாவல், நரசிங்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இன்று முதல் இந்த ரயில்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.