September 19, 2019
தண்டோரா குழு
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும் என்று கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நாடு முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மாநகரில் 10,000 லாரிகளும் புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் என சேர்த்து மொத்தம் 25 ஆயிரம் லாரிகள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இது குறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் கூறுகையில்.
நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசுக்கு 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.
இன்சூரன்ஸ் பல மடங்கு உயர்ந்து விட்டது மேலும் வாகனத்தை புதுப்பித்து அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது பல்வேறு கட்டுப்பாடுகளும் பல்வேறு புதிய நடைமுறைகளையும் கொண்டுவந்து உள்ளதால் நாங்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம் எனவே மத்திய மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மீண்டும் லாரிகளை எந்தவித சிரமமுமின்றி இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்தப் போராட்டமானது தொடரும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் விலைவாசி உயரும் எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் நல்லதொரு நடவடிக்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே எங்களை போன்ற அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.