December 20, 2018
தண்டோரா குழு
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியாவிலேயே மிக உயரமாக 165 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 165 அடி உயரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழாவை பேராயர் ஜோசப் சுதாகர் துவக்கி வைத்தார். விழாவில் கேரல் எனப்படும் கிறிஸ்துமஸ் கூட்டுப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டலின் பொது மேலாளர் ராமச்சந்திரன்,
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 165 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், இந்தியாவிலேயே மிக உயரமான மரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இதனை 24 மணி நேரத்தில் 24 ஊழியர்களை கொண்டு அமைக்கப்பட்டது.36 அடி அகலத்தில் 165 அடி உயரத்தில் செய்யப்பட்ட இந்த மரத்தில், குடில் ஒன்றும் அமைக்கப்பட்டு 20 வகையான கேக், ரொட்டிகள், குக்கீஸ் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் மான்கள் பூட்டிய பனிச்சாரட் வண்டி, பரிசுப்பொருட்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளாலும், பரிசுகளாலும் அலங்கரிக்கப்பட்ட இதனை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வியந்தனர்.இந்த துவக்க விழாவில் ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சக்தி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.