February 22, 2019
தண்டோரா குழு
சூடான் நாட்டின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து சூடான் நாட்டு மாணவர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ள கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த நாடான சூடானின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து
கோவையில் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீர் ஈடுபட்டு வருவதாகவும், எனவே சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக கோரியும் கோசங்கள் எழுப்பினர். சூடான் நாட்டு கொடியுடன் அனைவரும் கூடி நின்று அரபி மொழியில் கோசங்கள் எழுப்பியதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.