July 2, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்காக காத்திருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களில் தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மர்மமான உயிரிழந்துள்ளது குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என வன ஆர்வலர்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை,பெரியநாயக்கன்பாளையம், கோவை,போளுவாம்பட்டி,மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு வனச்சரகங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் குறிப்பாக சிறுமுகை வனச்சரகத்தில் 6 யானைகள்,ஒரு சிறுத்தை, மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் 3 யானைகளும்,பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் 5 க்கும் மேற்பட்ட யானைகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
மேலும்,கோவையில் இரு யானைகளும் உயிரிழந்துள்ளன.கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று காட்டு யானைகள் மர்ம மரணங்கள் குறித்து வனத்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.காட்டு யானைகள் இறப்பது எப்படி ? மரணம் ஏற்படாமல் தடுப்பதற்கு தீர்வு தான் என்ன ? வனத்துறை மருத்துவர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் ? என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் நம்முன் வன ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.எது எப்படி இருந்தாலும் காட்டு யானைகள் தொடர்ந்து இது போன்று மரணம் அடைவது குறித்து தமிழக வனத்துறை தலைவர் துரைராசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.