February 8, 2019 தண்டோரா குழு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய ஊட்டி அமர்வு நீதிமன்றம், 4 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதற்கிடையில், கொடநாடு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 11 பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் 10 பேர் ஜாமீனில் உள்ளனர். வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப் பழி சுமத்தினர்.
இதற்கிடையில், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு இன்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தோஷ் சாமி, ஜிதின் ஜாய், உதயகுமார், மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன் என 6 பேர் மட்டுமே ஆஜராகினர். இவ்வழக்கில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்ட நீதிபதி வடமலை, ஆஜராகாத 4 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது, 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்தார்.