February 3, 2020 தண்டோரா குழு
சீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது 3-வது நபருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 20 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முதல் கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவின் வுஹான் நகரில் தங்கிப் படித்துவந்த கேரளாவை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவச் சோதனை நடத்தியதில் கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதைபோல் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து, அவரும் ஆழப்புலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதியானது.இந்நிலையில், கேரள சட்டப்பேரவை இன்று கூடியதும், சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா, கரோனா வைரஸ் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 3-வது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டம் காங்கநாடு பகுதியில் ஒரு இளைஞருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர் வுஹான் நகரில் மருத்துவம் படித்து வருகிறார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதற்கு முன் 2 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இருவருமே வுஹான் நகரில் மருத்துவம் பிடித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் திருச்சூர், ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்கள்.தற்போதுள்ள சூழலில், கேரளாவில் 1,925 பேர் அவர்கள் வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.