May 16, 2018 தண்டோரா குழு
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலம் பணிமனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்தை ஓட்டுநர் கிரிஷ் வழக்கம்போல் அன்று காலை ஓட்டிச் சென்றனர். அவருடன் நடத்துனர் சஜன் கே.ஜான் உடன் இருந்தார்.
அன்று காலை 8.30 மணியளவில் அயூர் பேருந்து நிறுத்தத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் பஸ்ஸில் ஏறியுள்ளார். இதனையடுத்து கன்யகுளங்கரா பகுதிக்கு பேருந்து வந்தடைந்தபோது அதில் இருந்த கர்ப்பிணி பெண் திடீரென்று பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனை பார்த்த நடத்துனர் சஜன், பேருந்தின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்த அவரின் கணவரிடம் கூறியுள்ளார். கர்ப்பிணி பெண்ணின் நிலைமை மோசமாவதை உணர்ந்த ஓட்டுநர் அருகில் மருத்துவமனைகள் இல்லாததால் உடனடியாக எதைப்பற்றியும் யோசிக்காமல், பேருந்தை 20 கிமீ தூரம் உள்ள திருவனந்தபுரம் நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்துள்ளனர்.
அப்பெண்ணின் நிலையை உணர்ந்த இதர பயணிகளும் பேருந்துக்கு வழிவிடக்கோரி எதிரே வந்த வாகனங்களை ஜன்னல்களில் வழியாக சைகையில் எச்சரித்தவாறே இருந்தனர். காலை நேரம் என்பதால் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்துள்ளது.இதற்கிடையில்,பேருந்தில் பயணம் செய்த காவலர் ஒருவர் போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்து பேருந்து திருவனந்தபுரம் செல்லும் வரை சாலையில் உள்ள போக்குவரத்தை பேருந்துக்காக சரிசெய்து தருமாறு கோரியுள்ளார். அதன்பேரில் காவல்துறை தகுந்த ஏற்பாடுகளை செய்து தந்தது.
இதையடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு அரசுப் பேருந்து, ஆம்புலன்ஸாக மாறி கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.