March 8, 2019
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை – ஊராட்சி செயலர், மற்றும் பெண் உதவியாளர்கள் இரண்டு பேர் உட்பட மூவர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
கோவை துடியலூர் அடுத்த வடமதுரை தண்டபாணி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தனது நிலத்தை வரன்முறை படுத்துவதற்காக பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை அணுகி உள்ளார். அங்கு செயலாளராக உள்ள பிரகாஷ் என்பவர் உங்கள் விண்ணப்பத்தில் தவறு உள்ளது என கூறி உள்ளார் அவர் வரன்முறை படுத்த வேண்டும் என்றால் இரண்டு ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் தன்னிடம் பணம் இல்லை என வினோத் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தால் வரன்முறைப்படுத்தி தருவதாக பிரகாஷ் உறுதியளித்துள்ளார். இதனை தனது செல்போன் மூலம் படம் பிடித்த வினோத் உடனே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செல்போன் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி வினோத் இன்று மாலை 4 மணியளவில் ரசாயனம் தடவிய இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்த செயலாளர் பிரகாஷ்சின் உதவியாளர்கள் தனலட்சுமி, இந்திராணி ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பிரபுதாஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் உடனடியாக பிரகாஷ், தனலட்சுமி, இந்திராணி ஆகியோரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
மேலும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தனி அலுவலர் நவமணி, காணேஷ் ஆகியோரையும் வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 64 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளர்கள் இந்திராணி மற்றும் தனலட்சுமி ஆகியோரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்து மனைக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.