June 17, 2025
தண்டோரா குழு
கோவை சரவணம்பட்டியில் இயங்கும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 18) முதல் 5 நாட்களுக்கு லேர்னிங் சொசைட்டிஸ் அன்-கான்பிரான்ஸ் 2025 எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நடைபெறுகிறது.
ஷிக் ஷண்டார் அன்டோலன் எனும் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புதுமையான கருத்தரங்கு பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை குமரகுரு சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.இந்த இயக்கத்தின் நிறுவனர் மணீஷ் ஜெயின், குமரகுரு பொறியியல் கல்லூரியின் உதவி துணை தலைவர் சரவணன் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
முன்னதாக சரவணன் பேசுகையில்,
இந்த தனித்துவம் கொண்ட கருத்தரங்கை வரும் ஜூன் 18 முதல் 22 வரை குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடைபெறுகிறது எனவும் இந்த நிகழ்வு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைக்கும் என கருதுவதாக கூறினார். பல வருடமாக நடைபெற்று வரும் இந்த ‘அன்- கான்பிரான்ஸ்’ எனும் தனித்துவம் கொண்ட நிகழ்வை கோவையில் நடத்தவேண்டும் என எதிர்பார்த்து வந்ததாகவும், தற்போது அது சிறப்பாக நடைபெறவுள்ளது என்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மணீஷ் ஜெயின் பேசுகையில்,
அன்- கான்பிரான்ஸ் என்பது வழக்கமான கருத்தரங்குகள் போல இருக்காது. அது வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதில் மாற்று கல்வி நிபுணர்கள் உள்பட கல்வி கற்றல் துறையில் மாற்று சிந்தனை கொண்டவர்கள், கலைஞர்கள், இயற்கை விவசாயிகள், சமுதாயம் சார்ந்த தொழில்முனைவோர், சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த 1000-1500 பேர் கலந்துகொள்ள உள்ளனர் என கூறினார்.
பல தருணங்களில் ஒரு கருத்தரங்கின் சிறப்பு பேச்சாளர்களாக வருபவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சக பங்கேற்பாளர்கள் சிலர் அந்த நிகழ்வின் இடைவேளை நேரத்தில் பேசுவது புது தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தும். ஏன் ஒரு கருத்தரங்கு முழுவதுமே இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வடிவில் இருக்கக்கூடாது என எண்ணி, நாங்கள் உருவாக்கியது தான் இந்த ‘அன்- கான்பிரான்ஸ்
இதில் உள்ள பங்கேற்பாளர்களே பேச்சாளர்களாகவும், பயிலரங்கங்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் நிபுணர்களாகவும் செயல்படுவார்கள்.
இதில் கற்றல், கற்பித்தல் தொடர்பான புதுமையான மாதிரிகள் பற்றி பேசப்படும். அத்துடன் நிற்காமல் சுற்றுசூழல், வாழ்கை முறை, விவசாயம், கலை, நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பம், ஆன்மீகம் என பல்வேறு துறைகள் பற்றிய பேச்சுக்கள் இடம்பெறும். அறிவை, அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும். பல சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் மேடையாக இந்த 5 நாட்கள் திகழும். இதில் தினமும் 50 அமர்வுகள் இடம்பெறும். அதே போல நாள் ஒன்றுக்கு 150 பயிலரங்கங்கள் நடக்கும். இதில் அனைத்து வயதினரும் கலந்துகொள்கின்றனர், என கூறினார்.
ஜூன் 20ம் தேதி அன்று கோவை மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்வில் அவர்கள் பங்கேற்று, அவர்களின் படைப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.