June 4, 2019
தண்டோரா குழு
பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பள்ளி பாட புத்தகங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அட்டையில் ஒரு பெண் நடனமாடுவது போன்ற காட்சி, கோவில் படங்கள் மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போல படம் இருக்கிறது. இந்த படம்தான் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.மேலும்,தலைப்பாகை வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், காவியுடன் பாரதியாரின் தலைப்பாகை இருப்பது ஏன் என பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
இதனிடையே தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி, மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியை பொறுத்தவரை அதில் அரசியல் மற்றும் மதம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும் ஒரு தவறாகத் தான் இருக்க முடியும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்