June 6, 2020
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வட்டமலை கிராமம், அவிநாசிபாளையம் புதூரில் தனியாருக்குச் சொந்தமான கார்பன் உற்பத்தி தொழிற்சாலையால் இப்பகுதி சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காங்கேயம் அருகே உள்ளது அவிநாசி பாளையம் புதூர். வானவாரி விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் யுனைடெட் சொல்யூஷன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது .தேங்காய் தொட்டிகளை எரித்து அதன் மூலம் கிடைக்கும் தேங்காய் தொட்டிகரிகளை இங்கு கொண்டு வந்து கார்பன் ஆக மாற்றி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
பெரிய அளவில் தொழிற்சாலையில் பல்வேறு இரசாயனங்களை கொண்டு தொட்டி கரிகளை சுத்தப்படுத்துவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையிலிருந்து வரும் புகையால் அப்பகுதியில் காற்று மிகவும் மாசடைந்து உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையில் இருந்து வரும் கரித்துக்கள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விழுவதால் அப்பகுதியில் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு உள்ளதாகவும் விவசாய பயிர்களும் கால்நடைகளும் மிகவும் பாதிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது நிலத்தடி நீரில் ரசாயன கலவைகள் கலந்து வருவதால் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் விவசாயம் செய்வதற்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாமல் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இத்தொழிற்சாலையானது 24 மணி நேரமும் வருடம் முழுவதும் இயங்கி வருகிறது.ஒரு நாளில் குறைந்தபட்சம் 60 டன்னுக்கும் அதிகமான அளவில் கார்பன் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆக்டிவேடட் கார்பனாக மாற்றப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.மேலும், இங்கு தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கார்பன் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு, பின்னர் இதன் கழிவு நீரை பூமிக்கடியில் செலுத்தப்படுவதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மாசடைந்து, குடிநீரைப் பயன்படுத்த முடியாமல், இப்பகுதி மக்கள் தண்ணீரை வெளியில் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தொழிற்சாலையில் இருந்து வரும் கறித் துகள்கள் இங்குள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் படிந்து, சுற்றுச்சூழல் மற்றும் காற்றும் மாசடைந்து வருகிறது.மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் புற்றுநோய் நுரையீரல் மற்றும் சுவாசநோய்கள் ஏற்படுவதாகவும்,கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இது குறித்து காங்கயம் வட்டாச்சியர், தாராபுரம் சார்ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர்,மாசுகட்டுப்பாட்டு வாரியம் என வரிசையாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தொட்டிகள் தொழிற்சாலை இயங்கி வந்தால் பொதுமக்கள் இப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்படும் என்றும் உடனடியாக இந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். மக்களின் பல்வேறுகட்ட கோரிக்கைகளுக்கு பின் சோதனை செய்ய வரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் காற்று, நீர் மாசு அளவுகளை கணக்கிடும் சோதனைகளை செய்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாக இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.