July 30, 2019
தண்டோரா குழு
கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமாகியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஃபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த். இவர் நேற்று சிக்மகளூரு வழியாக கேரளா செல்ல திட்டமிட்ட நிலையில், திடீரென அவர் மாயமாகி உள்ளார். சிக்மகளூருவுக்கு காரில் சென்ற சித்தார்த், அருகில் உள்ள ஜேப்பினா மோகரூ என்ற இடத்தில் காரை விட்டு இறங்கி போனில் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அரைமணி நேரம் ஆகியும் அவர் திரும்ப காருக்கு வராததை அடுத்து அவரது ஓட்டுநர் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது.
இதனையடுத்து ஓட்டுநர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி, தேடுதல் பணியை விரைவு படுத்தியுள்ளனர்.விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் கூறியதால், ஆற்றில் தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர், பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கர்நாடகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.