July 21, 2020
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் 4 வீதியிலிருந்து 10 வீதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் உதிரி பாகங்கள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்த்தல் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கிராஸ் கட் சாலையில் துணி மற்றும் நகைக்கடைகள், இரண்டு நான்கு சக்கர உதிரிபாக கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் கொரொனா தொற்று ஏற்பட்டதையடுத்து 2 மற்றும் 3 ஆவது வீதி மூடப்பட்டது.
இந்நிலையில் காந்திபுரம் கிராஸ் கட் மற்றும் நூறடி சாலை என இரண்டு புறமும் 4 ஆவது விதியிலிருந்து 10 ஆவது விதி வரை யாரும் வாகனத்தில் செல்ல முடியாதபடி சாலைகள் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள், விற்பனை கடைகள் வரும் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இப்பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கடைகளுக்கு வருபவர்கள் நூறடி சாலை மற்றும் கிராஸ்கட் சாலையில் வாகனங்களை நிறுத்தி நடந்து சென்று வருகின்றனர். இதனால் பரபரப்பாக காணப்படும் கிராஸ் கட் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.