February 14, 2019
தண்டோரா குழு
வேலூரில் மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் இதயத்தை காதலர் தினமான இன்று தானமாக வழங்க கணவர் முன்வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்.14ம் உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில்தங்களுடைய அன்பின் வெளிபாடாக பூச்செண்டு உள்ளிட்ட பரிசு பொருட்களை ஒருவருக்கொருவர் வழங்கி தனது காதலை வெளிப்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.இதற்கிடையில் வேலூரில் இன்று சோக நிகழ்வு ஓன்று நிகழ்ந்துள்ளது. ஆம்! மூளைச்சாவு அடைந்த தனது மனைவியில் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை தானமாக வழங்க வேலூரை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவர் முன்வந்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் ராஜ். இவர் பெங்களூரு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா, இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணமாகியுள்ளது. கர்பமாக இருக்கும் கோகிலாவை பரிசோதித்த போது அவரது உடலில் ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. எனினும், கோகிலா உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், கோகிலாவை பரிசோதனை செய்த போது அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும் கவுதம் தன் மனதை சமாதானப்படுத்தி தன் மனைவியின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார். அதிலும் காதலர் தினமாக இன்று தன்னுடைய மனைவியின் இதயத்தை மற்றோரு இதயம் செயல்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்த வேண்டும் என்று கவுதம்ராஜ் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, கோகிலாவின் உடல் உறுப்புகள் இதயம், நுரையீரல், கணையம், உள்ளிட்ட 5 உடல் உறுப்புகளை தானமாக செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், கோகிலாவின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை வேலூரில் நடைபெற்று வருகிறது. காதலர் தினத்தன்று மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தையே தானமாக வழங்க முன்வந்த கவுதம்ராஜை பலரும் பாராட்டியும் அவரது மனைவிக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.