October 16, 2019
பறவை இனங்களிலேயே அரிதான, அழகான பறவை என்றால் முதல் இடத்தில் இருப்பது ‘ஹார்ன் பில்’ என்று சொல்லக்கூடிய இருவாச்சி பறவைகள் தான். இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை “ஹார்ன்பில்” Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதேபோல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையவை. அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இந்திய அளவில் ஒன்பது வகையும், தென்னிந்தியாவில் நான்கு வகை இருவாச்சி பறவைகளும் உள்ளன. இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட அத்திக்கடவு, பில்லுார் வனப்பகுதியில் இருவாச்சி பறவைகளின் கூட்டம், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இங்கு, மஞ்சள், கருப்பு, வெள்ளை வண்ணங்களில் கிரேட் இந்தியன் இருவாச்சி, மலபார் இருவாச்சி, மலபார் கிரே இருவாச்சி, சாம்பல் இருவாச்சி என நான்கு வகை இருவாச்சி பறவைகள் வாழ்கின்றன.
இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் நிறைந்த பசுமையான இந்த வனப்பகுதியில், நீர் மத்தி, ஆல் அத்தி, வேலம், நாவல், புங்கன், கருப்பாலை, இலுப்பை மரங்கள் இருப்பதால், இருவாச்சி பறவைகளுக்கு இந்த வனப்பகுதி சொர்க்க பூமியாக திகழ்கிறது.
பறவைகளின் காதலை எந்தப்புனைவும் இல்லாமல் எழுதவேண்டுமானால் இருவாச்சி பறவையை பற்றித்தான் எழுதவேண்டும். ஏனெனில் இரைத் தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இருபறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின் கூடு.
இனப்பெருக்க காலங்களில் பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு முன் கூண்டிற்குள் சென்றுவிடும். பின்னர், பெண் பறவைக்கு உணவு அளிப்பதற்கு சிறிய துவாரம் மட்டும் விட்டுவிட்டு, ஆண் பறவை மண்ணாலும் எச்சத்தாலும் கூட்டை அடைத்துவிடும். கூட்டில் இருக்கும் பெண் பறவை தனது இறகுகளை உதிர்த்து, மெத்தை போல் செய்து அடைகாக்கும். குஞ்சுகள் பறக்கும் நிலை வரும் வரை பெண் பறவை கூண்டிலேயே இருக்கும். பெண் பறவை சென்றவுடன், குஞ்சுகளை பராமரிக்கும் முழு பொறுப்பும் ஆண் பறவைதான் மேற்கொள்ளும். அவைகளுக்கு, பறக்கவும், இரை தேடவும் கற்றுக்கொடுப்பதும் ஆண் பறவையின் பணியாகும்.
என்ன ஒரு ஆச்சரியம் !
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா, அடைகாக்கும் காலத்தில், காதலி பறவைக்காக இரை தேடிச்செல்லும், காதலன் திரும்பவில்லை என்றால், காதலி உயிர்விடுவதை தவிர வேறு வழியில்லை. இயற்கையின் படைப்பில் ஆச்சரியமளிக்கும் இந்த அதிசய பறவைகளை, ரசிப்பதோடு நிறுத்திவிட்டாலே அவற்றை பாதுகாக்க முடியும்…
மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை எனப்பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர். காடு வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன. இப்பறவைகள் இப்போது அருகி வரும் இனமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.