December 3, 2018
தண்டோரா குழு
இந்துத்துவா பற்றி ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு கூட முழுமையான அறிவு இருந்ததில்லை என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசார சூடுபிடித்துள்ளது. அண்மையில் அங்கு நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்துத்துவாவின் சாராம்சம் என்ன என்பது எனக்கு ஆர்வத்தினை தூண்டும் வகையில் உள்ளது. தயவு செய்து இந்துத்துவாவை பற்றி நீங்கள் படியுங்கள். கீதை சொல்வது என்ன? ஒவ்வொருவரிடமும் அறிவு உள்ளது. உங்களை சுற்றி அறிவு உள்ளது. நம்முடைய பிரதமர் தன்னை இந்து என கூறி கொள்கிறார். இந்துத்துவாவின் அடிப்படையை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என பேசினார். இந்நிலையில் ஜோத்பூரில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
காங்.,க்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை. பொய்களை பரப்பி ஓட்டுக்களை பெற்று விடலாம் என நினைக்கிறது. வளர்ச்சிக்கான விவகாரத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போகிறார்களா? அல்லது எனது மத அடையாளம் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு வாக்களிக்க போகிறார்களா? என வாக்காளர்கள் முடிவு செய்வர். மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இல்லை என தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் கூறி வருகின்றனர். ராஜஸ்தானின் மக்கள், மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இருக்கா அல்லது இல்லையா? என்பதற்காக வாக்களிக்க போகிறார்களா? அவர்கள் மின்சாரம், நீர் மற்றும் சாலை ஆகிய விவகாரங்களுக்காக வாக்களிக்க விரும்புகின்றனர்.
இந்து மதம் மற்றும் இந்துத்துவா ஆகியவை பழமையான விசயங்கள். அவை அறிவு மற்றும் கலாசார வளம் நிறைந்த விசயங்கள். அதன் முழு விசயங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் காங்.,க்கு தான் இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது. மக்களுக்காக பணியாற்றாமல் தேர்தலில் வெற்றி பெற காங்., நினைக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரசால் எங்களை வெல்ல முடியாது என பேசியுள்ளார்.