December 24, 2018
தண்டோரா குழு
கூட்டணி குறித்து நியாமற்ற வாதங்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைப்பதாகவும், கலைஞர் அடிக்கடி சொல்லும் கூடா நட்பின் விளைவை திமுக
அனுபவிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்க கூட்டம் நடைபெறும். எமெர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விற்கு, இந்த ஆட்சியில் எத்தனை சிட்டிபாபுகள் கொல்லப்பட்டுள்ளனர்? எத்தனை ஆற்காடு வீராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியவர், திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டணி அவருக்காக உயிர்த்துறந்த சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். மிகப்பெரிய, சரிவை தோல்வியை திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
1999ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போது கொள்ளை அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸுடன் வைத்திருந்த கூட்டணியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்பட்டதற்கு ஆ.ராசாவும், மன்மோகன் சிங்கும் ஒருவருக்கொருவர் சொல்லி வருவது சாட்சி. எது கொள்ளை ஆட்சி என்பது அவர்களுக்கு தெரியும் என்றார்.
மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக இங்கு நடத்திய கூட்டத்தை திமுக, காங்கிரஸ் பெங்களூரில் நடத்திருக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியினரின் நடிப்பு நவராத்திரி சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பாக இருக்கிறது. உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.