December 27, 2018
தண்டோரா குழு
கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து தாமாக சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து விசாரிக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்பிணி பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரத்தசோகை இருப்பது தெரியவந்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, ரத்ததானம் செய்த இளைஞர் கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
பின்னர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்ட உத்தரவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும், சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது சாத்தூர் நகர காவல் நிலையத்தில் கர்ப்பிணி அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.