July 15, 2019
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. கூட்டணியின் மீது அதிருப்தியடைந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். மேலும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மும்பையில் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கர்நாடக அலுவல் ஆய்வு கூட்டம் இன்று தொடங்கியது. சபாநாயகர் தலைமையில் இந்த கூட்டம் கூடிய கூடியது. இதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடங்கியதும் பாஜக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் அரசுக்கு எதிராக கொண்டு வருவதாக சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது பாஜக சார்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உடனே நடைபெற வேண்டும் என்று பாஜக தரப்பில் சபாநாயகருக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது முடிவெடுத்த சபாநாயகர் வரும் 18-ம் தேதி அதாவது வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தனது முடிவை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்ததால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.