July 26, 2019
தண்டோரா குழு
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அரசின் மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடித்து வந்தது. இந்த சூழலில் சுயேச்சை எம்.எம்.ஏ.க்கள் 2 பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த சில நாள்களாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. தோல்வியை தொடர்ந்து குமாரசாமி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இந்நிலையில் இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலாவை சந்தித்து எடியூரப்பா உரிமை கோரினார். இதனை தொடர்ந்து கர்நாடகவில் ஆட்சியமைக்க ஆளுநர் எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் எடியூரப்பா ஒரு வாரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி கவர்னர் வஜுபாய் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வராக முதல்வராக எடியூரப்பா கடவுளின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பது இது 4வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.