May 31, 2018 தண்டோரா குழு
கர்நாடகா ஆர்.ஆர். சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த மே 12 ஆம் தேதி நடைபெற்றது.அதன்பின் நடந்த வாக்கு எண்ணிக்கையில்,பாஜக 104 இடங்களிலும்,காங்கிரஸ் 78 இடங்களிலும்,மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றது.
இதைத்தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து, மதஜ தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், ராஜேஸ்வரி நகர் தொகுதியில் போலி வாக்காளர் அடையாள அட்டை அதிக புழக்கத்தில் உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ராஜேஸ்வரி நகர் தொகுதியில் மே 12 நடைபெற இருந்த வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.
பின்னர் அந்த தொகுதிக்கு மே28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று,இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முனிரத்னா,பாஜக சார்பில் முனிராஜு கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் சார்பில் ஜி.எச்.ராமச்சந்திரா உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் முனிரத்னா சுமார் 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.