July 23, 2019
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவியது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது . இதையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
இதற்கிடையில், இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, கர்நாடக சட்டசபையில் 9 மணி நேர விவாதத்துக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு 99 எம்எல்ஏக்களும் எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். அரசுக்கு 99 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், ஆட்சி கவிழ்ந்தது. இதனால் பாஜக ஆட்சி அமைக்குமா? கர்நாடக பேரவை கலைக்கப்படுமா? அடுத்த முதல்வராக எடியூரப்பா பதவிக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.