December 14, 2018
தண்டோரா குழு
கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலியாயினர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கிராமம் சுளவாடி. இங்குள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில் பூஜைகள் முடிவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கமகெரே, கொல்லீகல் மற்றும் மைசூருவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்தன. இதையடுத்து, பிரசாத மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள, ஹானூர் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாதத்தில் கிராமத்தை சேர்ந்த எதிர்கோஷ்டி விஷம் கலந்திருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.