June 5, 2018 தண்டோரா குழு
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பல இடங்களில் புக்கிங் தொடங்கிவிட்டனர்.ஆனால்,காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் காலா படம் திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதால் கர்நாடகத்தில் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், காலா திரைப்படத்தை தடை செய்யக்கூடாது, படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து, கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் பெங்களூரு முதல்வர் இல்லத்தில் குமாரசாமியை சந்தித்து காலா திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்குமாறு மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி,
கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது. காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காலா படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் கூறும்போது,
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று ரஜினி கூறினால் காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என்றும் காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்றும் ரஜினிக்கு நிபந்தனை விடுத்துள்ளார்