August 8, 2018
தண்டோரா குழு
கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி கிடைத்ததை அடுத்து கண்ணீர் விட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்ததையடுத்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகி வாதிட்டார். திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.அம்மனுவில், மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன்,
ஜெ.நினைவிடத்துக்கு தடையில்லை என முன்பு கூறியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள். ஜெ.நினைவிடம் கட்ட எந்த சட்டசிக்கலும் இல்லை என்று பதில்மனு தாக்கல் செய்தார்கள். மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பதற்கு அரசு கூறும் காரணம் நியாயமானது அல்ல. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் என்பதால் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். திராவிட சித்தாந்தம் என்பது வேறு ஆகையால் கலைஞரை அங்கு அடக்கம் செய்வது சரியாகாது. திராவிட சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மெரினாவிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். தமிழக அரசு உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அரசு தரப்பு வழக்கறிஞர் சட்டபூர்வமாக வாதாடவில்லை. பழிவாங்கும் நோக்கில் அரசு வழக்கறிஞர் வாதிடுவதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கக்கோரும் வழக்கில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் வாதிட்டார். அப்போது, ஒரே நேரத்தில் அனைத்து வழக்கும் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. முன்னாள் முதல்வர்கள் சமாதி விவகாரத்தில் கடைபிடித்த முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. பெரியாரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை. தலைமைச்செயலாளர் வெளியிட்டது செய்திக்குறிப்பு மட்டுமே; அரசாணை அல்ல. கலைஞரின் உடல் அரசு மரியாதையுடன் மிகவும் கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்திரவிட்டனர். திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.