November 24, 2018
தண்டோரா குழு
கமல் இன்னும் குழந்தையாகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல் இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மணமேல் குடிக்கு வட சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டன. எழும்பூரில் இருந்து புறப்படும் நிவாரண பொருட்களை அமைச்சர் ஜெயக்குமார் அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
அதிமுக சார்பில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. சேதம் 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதாக மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதை மத்திய குழுவிடம் அறிவுறுத்தியுள்ளோம். தமிழக அரசு சேதத்தை சரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தான் 15 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரிடம் அறிக்கை அளித்து முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியதால் மத்திய குழு தற்போது வந்துள்ளது. மத்திய குழு வருகை தந்தது வரவேற்க கூடியது.
கஜா புயல் தாக்கம் கடுமையாக இருந்ததால், முதல்வர் நேரில் பல பகுதிகளை பார்வையிட்டதன் அடிப்படையில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைப்பெற்று வருகிறது. இயல்பு நிலை திரும்பும் அளவிற்கான பணிகளை தமிழக அரசு தூரிந்து செயல்படுத்தி வருகின்றது. தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான அனைத்து விதமான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு கொடுப்போம் என்றார்.
மேலும், கமல் ஒரு குழந்தை, ஏரியல் சர்வே காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். வான் வழியாக பார்ப்பதை விமர்சிப்பது குழந்தை தனமானது. கமல் இன்னும் களத்தூர் கண்ணம்மா நிலையிலே இருக்கின்றார் என விமர்சித்துள்ளார்.