February 27, 2019 தண்டோரா குழு
கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார்.
அப்போது பேசிய அவர்,
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 12 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில் , முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால் ஸ்டெர்லைட் அல்லது போலீசார்தான் காரணமாக இருக்க முடியும்.
அவர் காணாமல் போனது தொடர்பாக முகிலன் மகன், ஹென்றி டிபேன் போன்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.தமிழகத்தில் நடக்காத மர்மம் முகிலன் விவகாரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
அரசின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால் அரசுதான் பொறுப்பு என தெரிவித்தார். அவ்வாறு ஏதாவது நடந்து இருந்தால் அரசுக்கு இது கேடாக அமையும் என கூறினார்.
மேலும், வரும் 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கருப்பு கொடி காட்டப்படும். முல்லை பெரியாரில் புதிய அணையை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தது,நீட் விவகாரம், 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வாராத்து, உயர் மின் கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம் , சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என கூறினார்.
கருப்பு கொடி காட்டுவது வெற்று போராட்டம் என்ற தமிழிசையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அவருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கின்றது என வைகோ பதிலளித்தார். திமுக வுடன் பேச்சுவார்த்தை திருப்திகரமாக, மகிழ்ச்சிகரமாக இருக்கின்றது என கூறிய அவர், திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் இன்னும் ஆட்சிமன்ற குழு கூடவே இல்லை எனவும் கூறினார்.