December 31, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கஜா’ புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.353.7 கோடி ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசிடம் தமிழக அரசு 14,910 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் தற்போது 1146கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.