December 10, 2018
தண்டோரா குழு
அமெரிக்க தமிழர்கள் கஜா புயல் நிவாரணத்திற்காக மொய் விருந்து நடத்தியுள்ளனர். இதில் 5 ஆயிரம் டாலர் வசூலாகியுள்ளது.
கஜா புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன.
மேலும், இதனை தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ மக்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்படுள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்குள்ளான அனைத்து பகுதியை சேர்ந்த மக்களும் நீர், உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகள் போல வாழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு நாடெங்கிலும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண உதவிகள், நன்கொடைகள் என பல்வேறு உதவிகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வாகை மகளிர் தமிழ் சங்கம் நடத்திய மொய் விருந்து நிகழ்ச்சியில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. அமெரிக்கவாழ் தமிழர்களால் நடத்தப்பட்ட மொய்விருந்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் இருக்கும் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் இந்த மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்து டிசம்பர்- 8 ல் நடத்தப்பட்ட மொய்விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் குடும்பத்துடன் நிகழ்சியில் கலந்து கொண்டனர், அதன் மூலம் 5-ஆயிரம் அமெரிக்க டாலர் வசூலானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.