November 27, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணத்திற்காக இதுவரை ரூ.33.66 கோடி நிதி பெறப் பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கஜா’ புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, தனியார், அரசு சாரா நிறுவனங்கள் தனி நபர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் புயயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.33.66 கோடி நிதி சேர்ந்துள்ளது என தகவல் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இன்று மட்டும் ரூ.10.68 கோடி நிதி சேர்ந்துள்ளது.