November 16, 2018 தண்டோரா குழு
கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதி நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜாபுயல் தாக்கத்தால், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து 100 முதல் 130 கிலோ மீட்டர் வரை வீசிய சூறைக்காற்றால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.
இந்நிலையில், கஜா புயலில் காரணமாக தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சிவகொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதைப்போல், அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து திராவிடமணி என்ற 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வடமனபாக்கம் கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பிரியாமணி என்ற பெண் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின் ஒயர் அறுந்து விழுந்ததால் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் மேமாத்தூரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவரும், மரம் விழுந்ததால் பண்ருட்டியைச் சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளர் ரங்கநாதன் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 83,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.