December 20, 2018
- பா.நடராஜன்
இன்றைய இளைஞர் சமூகம் பப்ஜி, டிக்டோக், வாகன சாகசம், செல்பி மோகம் இப்படி பலவிஷயங்களில் மூழ்கி கிடந்தாலும் மறுபுறம் தனக்கென ஒரு இலட்சியத்தை உருவாக்கி அதில் சாதிக்கும் இளைஞர்களும் உள்ளனர். அந்த வகையில் வைர ரக தண்டாலில் உலகசாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் வீ.காளிராஜ். இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் நடுவபட்டி என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். காளிராஜ் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லாரியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
காளிராஜ் கடந்த நவம்பர் 30 அன்று சென்னையில் உள்ள உலகசாதனை அமைப்பின் சி.இ.ஒ முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 112 வைர ரக தண்டால் எடுத்து உலகசாதனை படைத்து கலாம்ஸ் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இவர் சிங்கப்பூர் வீரர் கியு கின்லே என்பவரின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து காளிராஜிடம் பேசினோம்,
வைர ரக தண்டால் எடுக்கிறதுல எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது?
உண்மையா சொல்லனும்னா இந்த சமூகம்தான் நான் உடற்பயிற்சி செய்றதுக்கான முக்கிய காரணம்னு சொல்லணும். சின்னவயசுல நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன் அப்போ என்ன எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க உடற்பயிற்சி செஞ்சோம்னா கொஞ்சம் உடல் வலிமையாகும்னு தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். அப்போ நிறைய பேர் நீ தண்டால் நல்லா எடுக்குற அப்படின்னு பாராட்டுனாங்க அதனால அது மேல ஈடுபாடு அதிகமாயிருச்சு.
உலக சாதனை பன்னனும்னு எப்படி முடிவெடுதீங்க?
கல்லூரி வாழ்க்கையில் சந்தித்த பல தோல்விகள் தான் இந்த சாதனை செய்வதற்கு காரணம். என்னுடைய ஆசிரியர்கள் கூட எனக்கு படிப்பில் ஆர்வமில்லாததால் பலமுறை என்னை அவமானப்படுத்திருக்காங்க அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இதுக்குல்லாம் பதில் சொல்ற விதமா எதாவது சாதிக்கணும்னு. அப்போதான் என்னால செய்ய முடிஞ்சது என்னனு யோசிச்சு உடற்பயிற்சி செய்றதுல எந்த வகையான சாதனைகள் இருக்கு அதுல எந்த மாதிரியான சாதனைகள நம்மளால பண்ண முடியும்னு பட்டியல் போட்டேன் அதுல முதல் கட்டமாதான் இந்த சாதனைய தேர்ந்தெடுத்தேன்.
ஆரம்பதுல இதுக்கு ஆகக்கூடிய செலவு இதெல்லாம் கேக்குறப்ப ரொம்ப மலைப்பா இருந்தது. அந்த நேரத்துலதான் கென்யா நாட்டைச்சேர்ந்த ஜியாப்பரி மூத்தாய் அப்படிங்கிற ஒரு மராத்தான் வெற்றியாளரோட வாழ்க்கை வரலார படிச்சேன் அவரு எப்படி ஏழ்மையான சூழ்நிலையிலும் தன்னோட இலக்குல வெற்றியடைஞ்சாருனு தெரிஞ்சுகிட்டப்பதான் சாதனை படைக்க பணத்த விட திறமை முக்கியம் அது நம்மகிட்ட அதிகமாவே இருக்குனு அதுக்கான பயிற்சிகள் செய்து எனக்கான இலக்குல வெற்றியடைந்தேன்.
உலகசாதனை பன்னிருக்கீங்க இவ்வளவு பெரிய சாதனை பண்ண யாரு உங்களுக்கு ஊக்குவிப்பா இருந்தாங்க?
கண்டிப்பா எங்க குடும்பத்தோட துணை இல்லாம இந்த சாதனைய என்னால பண்ணிருக்க முடியாது முக்கியமா சின்ன வயசுல இருந்து எங்க அண்ணன் நான் என்ன விசயம் பண்ணாலும் ரொம்ப பக்கபலமா இருப்பாரு. நான் இந்த உலகசாதனை செய்யபோறதபத்தி யாருகிட்டயும் சொல்லல நானே எனக்கு பெரிய ஊக்கத்த கொடுத்துகிட்டு இந்த சாதனைய பண்ணதுக்கு அப்பறமாதான் எங்க குடும்பத்துக்கே சொன்னேன் ரொம்ப சந்தோசபட்டாங்க.
உங்களுடைய அடுத்தகட்ட நகர்வு என்ன?
நான் போட்டிதேர்வுகளுக்காக தயாராகிட்டு இருக்கேன். நம்மோட திறமைய மறைச்சு வைக்கிறது நம்மோட தலைமுறைக்கு செய்ற துரோகம் மாதிரி அதானால இன்னும் உடற்பயிற்சி சார்ந்த பலசாதனைகளை என்னால முறியடிக்கமுடியும் அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து எடுத்துட்டுதான் இருக்கேன் அதெல்லாம் சாதிக்கிறதுக்கு பணம்தான் தடையா இருக்கு என்னோட திறமையை மதிச்சு ஸ்பான்சர்கள் முன்வந்தால் என்னோட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
சமூகத்துல இருந்து உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எப்படி இருந்தது?
ஊர்மக்கள், நண்பர்கள் பாராட்டுனாங்க அது போக பல அமைப்புகள் சார்பாக பாராட்டுவிழாக்கள் வச்சு கௌரவபடுதுராங்க. இதெல்லாம் விட என் மனசுக்கு நெருக்கமா இருந்த நிகழ்வு எங்க கல்லூரியில எனக்கு கிடைச்ச பாராட்டுதான் எந்த இடத்துல என்ன எதுக்கும் உதவாதவன்னு நிராகரிச்சாங்களோ அதே இடத்துல எனக்கு பாராட்டு விழாதான் என்னுடைய சுயமரியாதைக்கு கிடைச்ச அங்கீகாரமா நினைக்கிறேன் என்றார்.