January 4, 2021
தண்டோரா குழு
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு பணியாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன் உள்ளிட்ட சங்கங்கள் இனைந்து மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பல்லாயிரக்கணக்கில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சம்பளம் மிக மிக குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் இவர்களுக்கு வழங்க வேண்டும். கோவை மாநகராட்சியில் மட்டும் சுமார் 3000 தூய்மைப் பணியாளர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு நாளொனறுக்கு ரூ.375 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ676 ஆக நியமித்து வழங்க மாவட்ட கலெக்டர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.