June 13, 2019
தண்டோரா குழு
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக ஏற்கனவே 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மேலும் 3 பேரிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதையடுத்து நேற்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக விசாரணை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், நேற்று கோவையில் சம்பந்தப்பட்ட நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக அசாருதீனை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஆகியோர் வீடுகளில் அதிகாலை 4.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று மாநில காவல் துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது