February 13, 2019
தண்டோரா குழு
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
ஏழைக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். மேலும், ‘’இந்த மாத இறுதிக்குள் ஏழைக்குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் செலுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படும்’’என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தடைசெய்யக்கோரி சட்டப்பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,
60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்குவதை தடை செய்ய வேண்டும். ரூ.2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது சட்டவிரோதம் என கூறி உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.