April 3, 2018 தண்டோரா குழு
காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடத்தவுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய நடிகர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏப் 8 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம். ” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.