August 6, 2020
தண்டோரா குழு
ஏதாவது பேச வேண்டியது, வழக்கு பதியப்பட்டால் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது எஸ்.வி.சேகரின் வழக்கம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ் வி சேகர் வெளியிட்ட ஒரு வீடியோவில் அதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை வையுங்கள் என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இ-பாஸ் வழங்குவதில் எந்த தடையும் இல்லை. முறையான ஆவணங்கள் தாக்கல் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நயினார் நாகேரந்திரன் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார்.
அப்போது எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பிய போது, எஸ்.வி.சேகர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் வந்ததே இல்லை. ‘எஸ்.வி.சேகர் அதிமுகவில் சரியாக செயல்படாததால் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்’ எதாவது கருத்து சொல்லிவிட்டு வழக்கு வரும்போது, ஓடி ஒளிந்து கொள்வார் என்று அவர் கூறினார்.