December 5, 2018
தண்டோரா குழு
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ் நூலுக்குரிய விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் பற்றி பேசும் நாவல் சஞ்சாரம். 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஆவார் எஸ்.ராமகிருஷ்ணன். இவர், குழந்தைகள் இலக்கியம், பயண கட்டுரைகள், நாடகம் உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்களித்துள்ளார். தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார். எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், டச்சு, கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1984-ம் ஆண்டிலிருந்து சிறுகதை, நாவல், புதினம் உள்ளிட்ட ஏராளமானவற்றை எழுதி வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற உள்ள இவர் இதுவரை சுமார் 125 நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.