August 26, 2020 தண்டோரா குழு
வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யக்கோரி கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பானது 12 ஆயிரத்தை கடந்து செல்கின்றது. இதுவரைக்கும் 8500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 244 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வணிக வளாகங்கள்,
தொழிசாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள்,தொழில் கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு நிறுவனங்கள் மூடப்படும் செய்திகள் பரவலாக வருகிறது.
இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அப்படி முடியாவிட்டால் (pool test) என்று அழைக்கக்கூடிய நூறில் 10பேர் என்ற விதத்திலாவது அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு விதித்த அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலே நோய்த்தொற்றை கட்டுபடுத்த இந்த வழிமுறை பின்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.