November 24, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் புயலின் கோரத்தாண்டவத்தில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, கடந்த 16-ம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதைபோல், 20-ம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரை துச்சம் என நினைத்து, சீரமைப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 27,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது. சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.