February 16, 2019 தண்டோரா குழு
பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு இயன்றவரை சிறப்பான சிகிச்சையை வழங்குகிறோம். வீரர்களின் நலனுக்காக அரசு அறிவுறுத்தும் வேறு எந்த உதவியையும் செய்ய ஆயத்தமாக உள்ளோம்.
மேலும், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதுடன் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியையும் அளிக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.