June 1, 2018 தண்டோரா குழு
கோடை விடுமுறையை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்த கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடத்திட்டங்களுக்கான புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தும்மனட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டிற்கான விலையில்லா புத்தகங்கள்,சீருடைகள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதவல்லி தலைமையில் நடந்த இவ்விழாவில் இந்த பள்ளிக்கு சென்ற ஆண்டு ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வண்ணம் ஒரு ஆசிரியரை நியமித்து அவருக்கு ஓராண்டுக்கான ஊதியத்தை வழங்கியும் மற்றும் பள்ளிக்காக பல்வேறு உதவிகளை செய்த முன்னாள் நீலகிரி கூட்டுறவு நிறுவன தலைவர் கப்பச்சி டி வினோத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.தும்மனட்டி என்னும் கிராம பகுதியில் உள்ள இந்த பள்ளியானது இந்த ஆண்டு 10ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சியும்,12 ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.