February 20, 2019
தண்டோரா குழு
அயோத்தி தொடர்பான வழக்கை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பிப்.26-ம் தேதி விசாரிக்கவுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘இது தொடர்பாக, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையில் இருந்து, நீதிபதி, யு.யு. லலித் விலகினார். இதையடுத்து, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் இடம்பெற்றனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இனி அயோத்தி வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர். அதன்படி, அந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஐந்து நீதிபதிகளில் ஒருவரான எஸ்.ஏ.பாப்டி விடுமுறை முடிந்து திரும்பியவுடன் பிப்ரவரி 26-ம் தேதி வழக்கு விசாரணைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.