• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யக்கூடாது, தெர்மாகோள்களுக்கு அனுமதி இல்லை

February 4, 2023 தண்டோரா குழு

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.

தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 முதல் 70 டன் வரை மீன்கள் வரத்து காணப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 100 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். சங்கரா, வஞ்சிரம், மத்தி, அயிலை, விளை மீன் போன்ற பல்வேறு வகையான கடல் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மீன் வியாபாரிகளும், திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளின் மீன் வியாபாரிகளும், குன்னூர், ஊட்டி மீன் வியாபாரிகளும் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி செல்கின்றனர்.இதுதவிர கோவை மாநகர மக்கள் நேரடியாக சென்றும் மார்க்கெட்டில் மீன் வாங்குகின்றனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதியில் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்றாலும் கேரளா, கார்நாடக மாநிலங்களில் இருந்து மீன்கள் வருவதால் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து எப்போதும் காணப்படும். இதனால் மக்கள் கூட்டம் எப்போதுமே மீன் மார்க்கெட்டில் அதிகரித்து காணப்படும்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு உக்கடம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள், தெர்மாகோல் மூலம் பேக்கிங் செய்து கொண்டு வரப்படும் மீன்கள் விற்பனை செய்ய மார்க்கெட் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க செயலாளர் காதர் கூறியதாவது:

உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து மீன் வியாபாரிகள் வருகின்றனர். மார்க்கெட் நிர்வாகம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து அதனை மிகவும் கடுமையாக பின்பற்றி வருகிறது. மார்க்கெட்டில் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் கண்டிப்பாக ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இதனை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறையாவது சோதனை மேற்கொள்கின்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது. அதே போல் சுற்று சூழலுக்கு கெடு விளைவிக்கும் தெர்மாகோள் போன்ற பொருட்கள் மீன் மார்க்கெட்டிற்கு உள்ள எடுத்து வர அனுமதிப்பது இல்லை. ஆந்திரா மாநிலம் மீன்கள் தெர்மாகோளில் வருவதால் வேண்டாம் என நிறுத்திவிட்டோம். மக்களுக்கு நல்ல மீன்கள் கொடுப்பதே ஒரே குறிக்கோள். மேலும் மீன்களின் விலையும் அதிக அளவில் ஏற்றி வைக்காதவாறும் வியாபாரிகள் நேர்மையுடன் செயல்படும் மார்க்கெட்டாக உக்கடம் மீன் மார்க்கெட் உள்ளது. தற்போது தைப்பூசம் காரணமாக மீன்கள் அதிகம் விற்பனை ஆவது கிடையாது. ஆனாலும் மீன்கள் விலை உயர்த்தி வைக்கப்பட வில்லை. இன்றைய நிலவரப்படி கிலோ ஒன்றுக்கு சங்கரா ரூ.400 முதல் ரூ.550 , வஞ்சிரம் ரூ.600, மத்தி ரூ. 80 முதல் ரூ. 100, அயிலை ரூ. 120 முதல் ரூ.150, விளை மீன் ரூ. 300க்கும் தான் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மீன் வாங்க வரும் மக்கள் கூறுகையில், வீட்டில் விசேஷம், விழா கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்வுகளுக்கு அதிக மீன்கள் தேவைப்படும் பட்சத்தில் மீன் மார்க்கெட்டிற்கு வந்து மீன்கள் வாங்கும் போது மக்களுக்கு லாபம் கிடைக்கிறது. அதிக மீன்கள் குறைந்த விலையில் வாங்க முடியும். இங்கு ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. அனைத்து நாட்களிலுமே கூட்டம் அலைமோதும். வாகன நிறுத்தும் வசதி குறைவு. அதை சீர் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும், என்றனர்.

மேலும் படிக்க