July 4, 2019
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் வாளாங்குளம் கரையை ஒட்டி மஜித் காலனி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இந்த மஜித் காலனி குடியிருப்புகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மஜித்காலனியில் வசித்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் வெள்ளளூர், உக்கடம் கழிவுநீர் பண்ணை, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பெரும்பாலான மக்கள் மாற்று வீடுகளுக்கு குடி பெயர்ந்தனர். அந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் ஒரு சில குடும்பத்தினர் மட்டும் அந்த குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இன்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறையினர் உதவியுடன் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதற்கு ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வரும் ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வழங்கப்பட்டுள்ள வீடு வசதியாக இல்லை எனவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த வீடுகளை இடிப்பது தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதிகாரிகளை பொருத்தவரை போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு முறைப்படி ஆக்கிரமித்து வீடுகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.